உலகம்
கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் கீவ் நகரத்தில் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு

Published On 2022-05-18 23:12 GMT   |   Update On 2022-05-19 13:26 GMT
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியபோது, அதன் தலைநகர் கீவ்வில் இருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.
19.05.2022

18:30: கடந்த மூன்று நாட்களில் மட்டும் மரியுபோல் நகரில் உக்ரைன் படையைச் சேர்ந்த 1730 வீரர்கள் சரண் அடைந்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆனால், இதுபற்றி உக்ரைன் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. உருக்காலைக்குள் எத்தனை பேர் இருந்தார்கள்? வெளியேறியவர்கள் போக மீதமுள்ளவர்களின் நிலை என்ன? என்பது குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

16:30: உக்ரைனில் போர்க்குற்ற விசாரணையில் உள்ள முதல் ரஷிய வீரர், இன்றைய விசாரணையின்போது கீவ் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். ரஷிய படையெடுப்பின் ஆரம்ப காலத்தில், ஒரு குடிமகனை எவ்வாறு கொன்றார் என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார். 

16:00: மரியுபோல் உருக்காலையில் இருந்து பாதிக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் வெளியேறிவிட்டதாக ரஷிய செய்தி நிறுவனம் டிஏஎஸ்எஸ் தெரிவித்துள்ளது. அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் தலைவர் டெனிஸ் புஷிலின் கூறியதை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

11.32: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியபோது, அதன் தலைநகர் கீவ்வில் இருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. தூதரக அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்பினர். இந்நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு பிறகு கீவ்வில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரம் மீதான தாக்குதலை ரஷ்ய சில வாரங்களாக நிறுத்திய நிலையில், அமெரிக்க தூதரகம் மீண்டும் செயல்படவுள்ளது.

04.30: போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

04.20:  ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதலை தொடங்கியதில் இருந்து 1,280 க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த பிராந்தியத்தின் காவல்துறை  தலைவர் ஆண்ட்ரி நெபிடோவ் கூறியுள்ளார். 

உயிரிந்தவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லிபோவ்கா மற்றும் கொரோலோவ்கா கிராமங்களுக்கு அருகிலுள்ள நேற்று நடைபெற்ற வெடி குண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
 
03.10:  உலக வெப்பமயமாதல், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பு ஆகியவற்றால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாக ஐ.நா.சபை எச்சரித்துள்ளது. 

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு தொடர்பாக நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றிய பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இந்த போர் மூலம் பத்து மில்லியன் மக்கள் உணவின்றி தவிக்கும் அபாயம் உள்ளது என கூறினார். 

ஊட்டச்சத்தின்மை, பசி மற்றும் பஞ்சம் உள்ளிட்டவை பல ஆண்டுகளாக
நீடிக்கும் ஒரு நெருக்கடி நிலை தொடரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

02.30:  நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். 

நமது பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவும், ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் என தமது அறிக்கையில் பைடன் தெரிவித்துள்ளார்.

01.40: நேட்டோ அமைப்பில் பின்லாந்தும், ஸ்வீடனும் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த துருக்கி அரசு, தமது முடிவை கைவிட்டுள்ளதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லூட் கவுசோக்லு, நேட்டோ அமைப்பின் திறந்த வழி கொள்கைக்கு தமது ஆதரவை தெரிவித்தார். 

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ கூட்டணியில் சேர விரும்புவதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.  

இது அமெரிக்கா உட்பட நட்பு நாடுகளுடன் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.

18.05.2022

21.20: மரியுபோல் நகரில் அமைந்துள்ள உருக்கு ஆலைக்குள் தங்கியிருந்த 
1000 உக்ரேனியப் ராணுவத்தினர் சரணடைந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், போர்க் குற்றங்களுக்காக உக்ரைன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட  ரஷிய ராணுவ வீரர் ஒருவர்,  ஒரு உக்ரைன் குடிமகனைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் இதன் மூலம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

18:00: ஐரோபிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாடுகளின் தூதர்களை ரஷியா வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் 34 தூதரக அதிகாரிகளையும், இத்தாலியின் 24 தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றுகிறது. 

16:30: உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என ரஷிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர்  திமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு, இந்த செயல்முறையைத் தொடர முழு விருப்பம் இல்லை எனவும் அவர் கூறினார். 

15:00: சுமார் 1,000 உக்ரைன் வீரர்கள் மரியுபோல் ஆலையை விட்டு வெளியேறியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

11.33: உக்ரைனுக்கு எதிரான போரில் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அந்நகரில் உள்ள உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைன் ஈடுபட்டு வரும் நிலையில், 256 வீரர்கள் சரணடைந்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதில் 51 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ரஷிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News