உலகம்
பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப்

பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தல்: ராணுவ மந்திரி சூசகம்

Published On 2022-05-12 02:40 GMT   |   Update On 2022-05-12 02:40 GMT
பாகிஸ்தானின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கானின் அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பாகிஸ்தானின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப்பிடம், தற்போதைய ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வா இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து, புதிய ராணுவ தளபதி நியமனம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “புதிய ராணுவ தளபதி நியமிக்கப்படுவதற்கு முன்னரே பொதுத்தேர்தல் நடத்தப்படலாம். நவம்பர் மாதத்துக்கு முன்னர் காபந்து அரசுக்கு பதிலாக புதிய அரசு அமைய வாய்ப்புள்ளது” என கூறினார். பிரதமர் ஷபாஸ் ஷெரீப், கட்சி தலைமையில் பல முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில் ராணுவ மந்திரியின் இந்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News