உலகம்
கொரோனா பரிசோதனை

10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது -புதிய ஆய்வு

Published On 2022-01-16 11:30 GMT   |   Update On 2022-01-16 11:30 GMT
பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர்.
லண்டன்:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.

கொரோனா வைரசின் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது தொடர்பாக பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வின்படி, பிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, ஆர்என்ஏ அடிப்படையில் ஒரு புதிய வகை பரிசோதனை செய்ததில், சில நோயாளிகளுக்கு தொற்று குறிப்பிட்ட காலத்தை தாண்டி நீடித்திருப்பது கண்டறியப்பட்டது. அது, நிலையான 10 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை விட அதிகமாக இருந்தது.

அதாவது, 10 நாட்களுக்குப் பிறகு, 13 சதவீத நபர்களின் உடலில் கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருந்தது தெரியவந்திருக்கிறது.  இது, அவர்கள் இன்னும் நோய்த்தொற்றுடன் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சிலருக்கு 68 நாட்கள் வரை இந்த நிலை நீடித்திருக்கிறது. 

இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற எக்ஸிடர் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் லோர்னா ஹாரிஸ் கூறுகையில், ‘இது ஒப்பீட்டளவில் சிறிய ஆய்வாக இருந்தாலும், உயிர்ப்புடன் உள்ள வைரஸ் சில சமயங்களில் 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கலாம் என்றும், மேலும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன’ என்றார்.

எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது என்று இந்த ஆய்வு முடிவு அறிவுறுத்துகிறது. 
Tags:    

Similar News