உலகம்
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் இந்திய பயணம் ரத்து
குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டை தள்ளி வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
காத்மாண்டு:
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வரும் 10ம் தேதி ‘துடிப்பான குஜராத் உச்சிமாநாடு’ தொடங்கவிருந்தது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மூன்று நாட்கள் இந்த உச்சிமாநாடு பெரிய அளவில் நடத்தப்பட இருந்தது. பல நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டை தள்ளி வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து நேபாள பிரதமரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் நேபாள பிரதமரின் நான்கு நாள் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் தனிச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மே 26-க்கு பிறகு முதல் முறையாக நேற்று 3,000-ஐ தாண்டியது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு 8,40,643 ஆக உயர்ந்தது. மேலும், குஜராத்தில் நேற்று 50 நபர்களுக்கு புதிய ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 204 ஆக உள்ளது.