உலகம்
ஓரின சேர்க்கையாளர் உரிமை ஆர்வலர்கள்

ஒரே பாலின தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் -இஸ்ரேல் அரசு

Published On 2022-01-04 13:26 GMT   |   Update On 2022-01-04 13:26 GMT
இஸ்ரேலில் எல்.ஜி.பி.டி.க்யூ. போராட்டத்திற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என சுகாதாரத்துறை மந்திரி நிட்சன் ஹாரோவிட்ஸ் தெரிவித்தார்.
ஜெருசலேம்:

இஸ்ரேலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டம் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது. அதில், ஒரே பாலின தம்பதிகள் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக ஓரின சேர்க்கையாளர் உரிமை ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே பாலின தம்பதியர் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்த தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், இஸ்ரேல் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதன்மூலம் ஒரே பாலின தம்பதியர் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், அந்த நாட்டிற்குள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். 

இஸ்ரேலில் எல்.ஜி.பி.டி.க்யூ. போராட்டத்திற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என சுகாதாரத்துறை மந்திரி நிட்சன் ஹாரோவிட்ஸ் தெரிவித்தார். மேலும், வாடகைத்தாய் மூலம் கர்ப்பம் தரிப்பதில் அனைவருக்கும் சமமான அணுகலை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
Tags:    

Similar News