செய்திகள்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்- பழமையான தேவாலய கோபுரம் இடிந்தது

Published On 2021-11-28 14:11 GMT   |   Update On 2021-11-28 18:33 GMT
இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தபோதிலும், மிகவும் ஆழமான பகுதியில் ஏற்பட்டதால், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை
லிமா:

பெரு நாட்டின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான பராங்காவில் இருந்து 42 கிமீ வடக்கு வடமேற்கில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

வடக்கு பெருவில் பாதுகாக்கப்பட்ட 400 ஆண்டு பழமையான தேவாலயத்தில் 14 மீட்டர் உயரம் கொண்ட கோபுரம் இடிந்து விழுந்தது. ஈக்வடாரில் உள்ள ஒரு தேவாலயம் சேதமடைந்தது. கொலம்பியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தபோதிலும், மிகவும் ஆழமான பகுதியில், அதாவது 112 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பெரு நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News