செய்திகள்
வங்காளதேசத்தின் நன்மதிப்பை கெடுக்க சிலர் முயற்சி -பிரதமர் ஹசீனா ஆவேசம்
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள், வன்முறைக்கு காரணமானவர்கன் என சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதிக்கும் வகையிலான புகைப்படம் பேஸ்புக்கில் பரவியதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. துர்கா பூஜையின்போது ஏராளமான இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன, இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்துக்கள் பலர் தாக்கப்பட்டனர். வன்முறைக்கு 8 பேர் பலியாகினர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள், வன்முறைக்கு காரணமானவர்கன் என சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை பிரதமர் ஷேக் ஹசீனா வன்மையாக கண்டித்தார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், வங்காளதேசத்தின் நன்மதிப்பைக் கெடுக்கவும், மதரீதியில் பிளவை உருவாக்கவும், சுயநலன் கொண்ட சில தரப்பினர் பிரச்சாரத்தைப் பரப்புவதாக பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார்.
வங்காளதேசத்தை பின்னோக்கி கொண்டு செல்ல யாராலும் முடியாது. எப்போதாவது நாம் பார்க்கும் சில சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை ஆகும். வேண்டுமென்றே இவ்வாறு செய்வதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது, எனவும் ஷேக் ஹசீனா கூறினார். ஆனால், யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.