செய்திகள்
அகதிகள் முகாம்

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தாக்குதல்-7 பேர் பலி

Published On 2021-10-22 10:10 GMT   |   Update On 2021-10-22 10:10 GMT
வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா:

வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு, சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதுடன், கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் வங்காளதேசம்-மியான்மர் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ரோஹிங்கியா சமூகத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட காரணத்தால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

இதுகுறித்து ஆயுதப்படை மண்டல தலைவர் ஷிஹாப் கைசர் கான் கூறுகையில், "மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட முகாமில் இருந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். அப்போது, நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலுகலி முகாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களில் ஒருவர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன." என்றார்.
Tags:    

Similar News