செய்திகள்
கனமழை வெள்ளத்தில் கார்கள் மூழ்கியிருக்கும் காட்சி

நேபாளத்தில் இடைவிடாது கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி

Published On 2021-10-21 02:09 GMT   |   Update On 2021-10-21 02:54 GMT
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் முடங்கியுள்ளது.
காத்மாண்டு :

நேபாளத்தில் ஜூன் மாதம் மத்தியில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதிவரை பருவமழை காலமாகும். அந்த நாட்டின் பெரும்பாலன பகுதி மலைப்பாங்கான இடங்களாக இருப்பதால் ஆண்டு தோறும் பருவமழை காலத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதும் இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேபாளத்தில் பருவ மழை காலம் முடிந்த பின்னரும் அங்கு மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

குறிப்பாக நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடுகிறது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் வெள்ளதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அதே போல் கரை புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் சாலைகளும் அடித்து செல்லப்பட்டன. பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவாசய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்கில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மேலும் இந்த நிலச்சரிவால் கிராமங்களுக்கு இடையிலான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதே போல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இதற்கிடையே கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதோடு 30-க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியாத நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

எனினும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News