செய்திகள்
கோப்புப்படம்

தைவானில் தீக்கிரையான 13 மாடி கட்டிடம்: 46 பேர் உடல் கருகி பலி

Published On 2021-10-14 10:39 GMT   |   Update On 2021-10-14 10:39 GMT
தெற்கு தைவானில் உள்ள 13 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தெற்கு தைவானில் உள்ள கயோசியுங் என்ற இடத்தில் 13 மாடி அப்பார்ட்மென்ட் கட்டிடம் ஒன்று இருந்தது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் கடைசிகள் இயங்கி வந்தன. இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல தீ கட்டிடம் முழுவதும் பரவியது.

அதிகாலை என்பதால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். தீ வேகமாக பரவ அவர்களால் எளிதாக தப்பிக்க முடியவில்லை. 100-க்கும் மேற்பட்டோர தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.

55 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியாத நிலையில், அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீட்புப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
Tags:    

Similar News