செய்திகள்
ராணி எலிசபெத்

இங்கிலாந்து ராணி எலிசபெத் இறந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் கசிந்தது

Published On 2021-09-04 10:23 GMT   |   Update On 2021-09-04 10:23 GMT
இங்கிலாந்து ராணி இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு திட்ட விவரங்கள் குறித்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லண்டன்:

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டு உள்ளது.

ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தற்போது கசிந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

‘ஆபரே‌ஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற குறியீட்டு பெயரில் இங்கிலாந்து ராணி இறந்த பிறகு என்ன நடக்கும் என்ற விவரங்கள் அமெரிக்க செய்தி நிறுவனமான பொலி டிக்கோவுக்கு கசிந்து இருக்கிறது.

அதில் ராணி இறக்கும் நாளை அதிகாரிகள் ‘டி டே’ என்று குறிப்பிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணி இறந்த 10 நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்படுவார் என்றும் இறுதிச்சடங்கு ஊர்வலம் அவரது மகனும் வாரிசான இளவரசர் சார்லஸ் தலைமையில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ராணி உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டி பாராளுமன்ற இல்லத்தில் 3 நாட்கள் இருக்கும்.



இதில் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு வருவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ராணி இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டனுக்கு கணிக்க முடியாத கூட்டம் மற்றும் பயண குழப்பங்களை நிர்வகிக்க ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து ராணி இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு திட்ட விவரங்கள் குறித்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News