செய்திகள்
ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டம்- மியான்மர் மோதலில் மேலும் 25 பேர் பலி

Published On 2021-07-04 17:10 GMT   |   Update On 2021-07-04 17:10 GMT
கிராமத்திற்குள் புகுந்த ராணுவ வீரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியதாகவும், அதனால் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
யாங்கோன்:

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது. 

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், ராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.



இந்நிலையில், மத்திய மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான மோதல் தீவிரமடைந்துள்ளது. சில பகுதிகளில் ராணுவத்திற்கு எதிராக மக்களே ஒன்று சேர்ந்து பாதுகாப்பு படைகளை உருவாக்கி உள்ளனர். 

இதில், காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்திற்கு எதிரான பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 890 ஆக உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை கிராமத்திற்குள் புகுந்த ராணுவ வீரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியதாகவும், அதனால் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

இறந்துபோனவர்களின் உடல்களை மீட்பதற்கு கூட வெளியேற முடியாத நிலையில் இருந்துள்ளனர். சனிக்கிழமை 17 உடல்களும், இன்று 8 உடல்களும் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பலர் ஊரை காலி செய்து சென்றுவிட்டனர். காட்டுப்பகுதியில் உள்ள தங்கள் குழுவினரை ராணுவம் வேட்டையாடி வருவதாக பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News