செய்திகள்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்

உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Published On 2021-07-03 11:05 GMT   |   Update On 2021-07-03 11:05 GMT
டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
ஜெனீவா:

உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் கிருமியானது, அது கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. 

இதில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது டெல்டா வகை வைரஸ். இந்தியாவில் மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய டெல்டா வைரஸ், உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.



இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளது என எச்சரித்துள்ளார்.

இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும், டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News