செய்திகள்
ஜோ பைடன்

அமெரிக்காவில் வன்முறைக்கு காரணமான சட்டவிரோத துப்பாக்கி வர்த்தகத்தை தடுக்க ஜோ பைடன் நடவடிக்கை

Published On 2021-06-23 21:24 GMT   |   Update On 2021-06-23 21:24 GMT
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக ஜோபைடன் அதிரடியாக 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்து வருகிறது. இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இத்தகைய துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக சட்ட விரோத கடத்தல் துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்க வேண்டும் என்று ஜோ பைடன் கருதுகிறார். இதற்காக அவர் அதிரடியாக 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது. மேலும், இப்போது சட்ட விரோத துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு 5 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது, கொடிய துப்பாக்கி சூடு மற்றும் பிற வன்முறையில் பயன்படுத்தப்படுகிற சட்டவிரோத கடத்தல் துப்பாக்கி வினியோகத்தை தடுப்பதில் ஒரு முக்கிய படியாக அமையும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த 5 பணிக்குழுக்கள் நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வாஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News