செய்திகள்
போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் மேலும் 4 வாரங்களுக்கு பிறகே ஊரடங்கில் தளர்வுகள் - போரிஸ் ஜான்சன்

Published On 2021-06-14 21:28 GMT   |   Update On 2021-06-14 21:28 GMT
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
லண்டன்:

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  

இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இருந்து வருகிறது. இந்தப் புதிய பாதிப்புகளில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் என்று இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.



இதற்கிடையே, இங்கிலாந்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 21-ம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். ஜூலை 19-ம் தேதிக்குப் பிறகே ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறுகையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் சூழலில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மேலும் பலருக்கு செலுத்த அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மேற்கொண்டு நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News