செய்திகள்
சீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியது -12 பேர் உயிரிழப்பு
காயமடைந்தவர்களில் பலருக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், பொதுமக்கள் ரத்த தானம் செய்யும்படி மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டுள்ளன.
ஹாங்காங்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் ஷியான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று எரிவாயு குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது. கடைகளில் வேலை செய்தவர்கள், பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் என ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களும் உடைந்தன.
விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 138 பேர் காயமடைந்ததாகவும் அரசு ஊடகமாக சிசிடிவி தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் வசித்த சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்தவர்களில் பலருக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் ரத்த தானம் செய்யும்படி மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டுள்ளன.