செய்திகள்
வாளால் கேக் வெட்டிய ராணி எலிசபெத்

வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்

Published On 2021-06-13 05:03 GMT   |   Update On 2021-06-13 05:03 GMT
ஜி7 மாநாட்டின் இடையே ஜி7 கூட்டமைப்பின் தலைவர்கள், இங்கிலாந்து ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
லண்டன்:

ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும். 

இந்த நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2ம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார். 



மாநாட்டிற்கிடையில், ராணி 2ம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. ராணி வாளால் கேக் வெட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ராணி கேக் வெட்டிய நிகழ்வானது, அவரது பிறந்த நாளை நினைவுபடுத்தியது. அவரது உண்மையான பிறந்த நாள் ஏப்ரல் 21 ஆகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது கணவர் இளவரசர் பிலிப் மறைந்ததால், ராணியின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படவில்லை.
Tags:    

Similar News