செய்திகள்
கோப்புப்படம்

நைஜீரியாவில் போலீஸ் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 7 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

Published On 2021-05-09 21:26 GMT   |   Update On 2021-05-09 21:26 GMT
நைஜீரியாவில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர்.
அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.‌ இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வளமிக்க மாகாணமான ரிவர்ஸ் மாகாணத்தில் போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை அரங்கேற்றினர். நேற்றுமுன்தினம் இரவு ரிவர்ஸ் மாகாணத்தின் சோபா நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு வேனில் வந்த பயங்கரவாதிகள் அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 2 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதன் பின்னர் அங்கிருந்து வேனில் தப்பிச் சென்ற பயங்கரவாதிகள் வழியில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து எரித்தனர்.‌ இந்த கோர சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதன் பின்னர் அருகில் உள்ள ஒரு மற்றொரு போலீஸ் நிலையத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதே சமயம் போலீசாரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News