செய்திகள்
பாலம் உடைந்து சாலையில் விழுந்த மெட்ரோ ரெயில்

மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்த ரெயில் - 23 பேர் பரிதாப பலி

Published On 2021-05-04 18:21 GMT   |   Update On 2021-05-04 18:21 GMT
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உலகின் மிகப்பெரிய மற்றும் விரைவான போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மெட்ரோ ரெயில்
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மெக்சிகோ சிட்டியின் தெற்குப் பகுதியில் உள்ள ஒலிவோஸ் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

ரெயில் நிலையத்துக்கு அருகே உள்ள மெட்ரோ ரெயில் பாலத்தில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.‌ அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரெயிலின் சில பெட்டிகள் சாலையில் விழுந்தன. அவற்றில் ஒரு பெட்டி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது விழுந்தது.‌ சாலையில் விழுந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறித் துடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனே விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த ரெயில் பெட்டிகளை ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தி விட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.‌

இடிபாடுகளில் இருந்து 23 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். மேலும் 70-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே விபத்தில் சிக்கிய மெட்ரோ ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் மேலும் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என தெரிகிறது.‌
Tags:    

Similar News