செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஐரோப்பாவில் 12 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி? அனுமதி கோரி பைசர் நிறுவனம் விண்ணப்பம்

Published On 2021-05-01 01:56 GMT   |   Update On 2021-05-01 01:56 GMT
அமெரிக்காவிலும் இதே வயதுடையவர்களுக்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் ‘பைசர்’ நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது.
பிரசல்ஸ்:

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசரும், ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த நிறுவனங்களின் தடுப்பூசி ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஐரோப்பாவில் தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் பைசர் நிறுவனமும், பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து விண்ணப்பித்துள்ளன.



இதுபோல், அமெரிக்காவிலும் இதே வயதுடையவர்களுக்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் ‘பைசர்’ நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதல் முறையாக இன்றுதான் (சனிக்கிழமை) தடுப்பூசி போடப்படுகிறது. ஐரோப்பாவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்கனவே போடப்பட்டு வருகிறது.

ஒருவேளை ‘பைசர்’ நிறுவனத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், 12 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது உலக அளவில் இதுவே முதல் முறையாக இருக்கும்.
Tags:    

Similar News