செய்திகள்
கோப்புப்படம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் மாயம் - தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள்

Published On 2021-04-22 19:23 GMT   |   Update On 2021-04-22 19:23 GMT
மாயமான நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. ஒரு ஹெலிகாப்டரும், 400 வீரர்களும் தேடும் பணியில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402. இந்த கப்பல் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் பயிற்சி முடித்து விட்டு அது திரும்பவில்லை. எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதையடுத்து அந்த நீர்மூழ்கிக்கப்பல் மாயமாகி விட்டதாக கருதப்படுகிறது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர். அவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.அந்த நீர்மூழ்கிக்கப்பலைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. ஒரு ஹெலிகாப்டரும், 400 வீரர்களும் தேடும் பணியில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிங்கப்பூரும், மலேசியாவும் மீட்பு கப்பல்களை அனுப்புகின்றன. இதேபோன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் மீட்புப்பணியில் உதவுவதற்கு முன் வந்துள்ளன. காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், ஜெர்மனியில் கட்டப்பட்டதாகும். ஆழமான நீரில் மூழ்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த நீர்மூழ்கிக்கப்பலின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு மத்தியில் காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் எண்ணெய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது, அந்த கப்பலின் எண்ணெய் டேங்க் சேதம் அடைந்திருக்கலாம் என்பதின் வெளிப்பாடாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்தக்கப்பலின் மாலுமிகள் விட்டுச்சென்ற சமிக்ஞையாகவும் இருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.

இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று மாயமாகி இருப்பது இதுவே முதல் முறை என்று அந்த நாட்டின் கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
Tags:    

Similar News