செய்திகள்
இளவரசர் பிலிப்

இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு - அரசி மீதான தளராத விசுவாசம் கொண்டாடப்படும்

Published On 2021-04-17 11:15 GMT   |   Update On 2021-04-17 11:15 GMT
இளவரசர் பிலிப்புக்கு பிரிட்டனின் ராயல் கப்பற்படையோடு இருந்த உறவு, கடலோடு இருந்த காதல்தான் வின்சர் கோட்டையில் நடக்கவிருக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் மையக் கருவாக இருக்கும்.
லண்டன்:

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99) கடந்த 9ம் தேதி காலமானார். இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி நடைபெறவுள்ள இறுதி ஊர்வலத்தில் இளவரசர் பிலிப்பின் பிள்ளைகள் மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். 

இளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இளவரசர் பிலிப், தான் விரும்பியபடி மாற்றி வடிவமைக்கப்பட்ட லேன்ட்ரோவர் காரில், அவரது உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. 

இளவரசர் பிலிப்புக்கு அரசியிடம் இருந்த அசைக்கமுடியாத விசுவாசம், அவர் நாட்டுக்கு செய்த சேவை, அவரது தைரியம் போன்றவை அவரது இறுதிச் சடங்கின்போது கொண்டாடப்படும். 

இளவரசர் பிலிப்புக்கு பிரிட்டனின் ராயல் கப்பற்படையோடு இருந்த உறவு, கடலோடு இருந்த காதல்தான் வின்சர் கோட்டையில் நடக்கவிருக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் மையக் கருவாக இருக்கும். இளவரசரின் விருப்பப்படி, எந்த பிரசங்கமும் நடக்காது. இளவரசரின் இறுதிச் சடங்கில் 730-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்த 30 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது வீட்டில் இருந்தபடி இறுதி சடங்கு காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்க உள்ளார்.

இதற்கிடையே, இறுதி நிகழ்வில் முக்கியமான நேரமான பிற்பகல் 3 மணிக்கு, இளவரசரின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனின ஹீத்ரூ விமான நிலையத்தில் முதல் ஆறு நிமிடங்களுக்கு எந்த விமானமும் தரையிறங்கவோ பறக்கவோ செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News