செய்திகள்
சீனா கொடி

இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திபெத்தில் பிரமாண்டமான அணை கட்ட சீனா முடிவு

Published On 2021-04-12 13:29 GMT   |   Update On 2021-04-12 14:10 GMT
சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

பீஜிங்:

மத்திய சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திபத் உள்ளது.

திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அணையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட இருக்கிறது.

இதற்காக, நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தின் புகழ்பெற்ற நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மலைவாழ் பழங்குடியினர் விரட்டப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். சீனா தொழிலாளர்கள் இங்கு நிரந்தரமாக குடியேறும் அபாயமும் உள்ளது.

சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இமயமலையில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா, வங்கதேசம் வழியாக செல்கிறது. இது ஆசியாவின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று. இந்த நதியின் குறுக்கே தான் சீனா கட்டும் பிரம்மாண்ட அணை அமைய இருக்கிறது.

சீனா இந்த அணையை திபெத்தில் கட்டுவதன் மூலம், பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் பாய்வதற்கு முன்பே அந்த தண்ணீரை தடுத்து நிறுத்த இருக்கிறது.

இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும். சீனா நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக இந்த அணையை கட்டுவதாக கூறினாலும் இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதி நீர் கிடைக்காமல் தடுக்கவே இந்த சதியில் சீனா இறங்கி உள்ளது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தியா தனது எல்லைக்கு பிரம்ம புத்திரா நதியில் மற்றொரு அணை கட்ட யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News