செய்திகள்
ஜோ பைடன்

ஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Published On 2021-03-04 09:43 GMT   |   Update On 2021-03-04 09:43 GMT
ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

வாஷிங்டன்:

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் சண்டையிட்டு வருகிறார்கள். ஈராக்கில் தற்போது சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.

இவர்கள் அங்குள்ள ராணுவம் மற்றும் விமான படை தளங்களில் முகாமிட் டுள்ளனர். அமெரிக்க படைகளை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு அமெரிக்க படைகள் மீதான தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.

ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சிலியாவில் ஈராக் எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக நேற்று ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்கு பகுதியில் அன்பர் மாகாணத்தில் உள்ள விமான படை தளத்தில் அடுத்தடுத்து 13 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இந்தநிலையில் ஈராக்கில் அமெரிக்க படையின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “தற்போது நாங்கள் தாக்குதல் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். நல்லவேளையாக ராக்கெட் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் அமெரிக்க ஒப்பந்தகாரர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம்” என்றார்.

மேலும் இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் ஈராக்கில் ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பதிலளிப்பது தொடர்பாக பரிசீலிக்க கூடும்” என்று எச்சரித்து இருக்கிறது.

Tags:    

Similar News