செய்திகள்
இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி?

Published On 2021-02-23 08:57 GMT   |   Update On 2021-02-23 08:57 GMT
இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்தநிலையில் இம்ரான்கான் பயணிக்கும் விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு அவர் பயணம் செய்த விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்தது.

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

ஆனாலும் சர்வதேச விதிகளின்படி இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் விமானம் பறக்க இந்தியா அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

முக்கிய தலைவர்கள் செல்லும் விமானங்கள் சர்வதேச வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது இலங்கை சுற்றுப்பயணத்தில் அந்தநாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதாக இருந்தது. ஆனால் அந்த உரை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக இலங்கை அறிவித்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இம்ரான்கான் உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக இலங்கை தெரிவித்தது.

ஆனால் இலங்கை பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான்கான் பேசினால் இந்தியாவுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால் உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News