செய்திகள்
5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து வழங்கியது இந்தியா... நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்
இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டின் அதிபர் பெற்றுக்கொண்டார்.
கொழும்பு:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.
அவ்வகையில், இலங்கைக்கு இந்தியா இலவசமாக 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது. மும்பையில் இருந்து இன்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து, மதியம் கொழும்பு சென்றடைந்தது. அந்த மருந்துகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டார்.
இலங்கைக்கு தடுப்பூசி மருந்து வழங்கி உதவி செய்த இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றான கோவிஷீல்டை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்திடம் இருந்து 20 முதல் 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய உள்ளதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் ஆலோசகர் லலித் வீராதுங்கா தெரிவித்து உள்ளார்.