செய்திகள்
கோப்புப்படம்

ரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

Published On 2021-01-27 21:48 GMT   |   Update On 2021-01-27 21:48 GMT
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மாஸ்கோ:

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.‌இந்த உரையாடலின்போது அமெரிக்காவின் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னிக்கு ஆதரவான போராட்டங்கள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.‌

‘‘எங்களுக்கு அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை ஜனாதிபதி ஜோ பைடன் தெளிவுபடுத்தினார்’’ என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்த எந்த ஒரு விஷயமும் குறிப்பிடப்படவில்லை.

‘‘ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதி செய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசினர்’’ என்று கிரெம்ளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த உரையாடலின்போது அமெரிக்க - ரஷிய அணு ஆயுத போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒபாமா கால ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தை புதுப்பிக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
Tags:    

Similar News