செய்திகள்
கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் உட்செலுத்தப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு. கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர்.
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டிசம்பர் 22-ம் தேதி ஜோ பைடன் கொரோனா தடுப்புக்கான முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.
இதேபோல், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தடுப்புக்கான முதல் டோஸ் டிச்மபர் 29-ம் தேதி உட்செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று உட்செலுத்தப்பட்டது.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், அனைவரும் அவரவர் முறை வரும்போது தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் உயிரைக் காக்கும் என தெரிவித்துள்ளார்.