செய்திகள்
கோப்புபடம்

லிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி

Published On 2021-01-22 07:27 GMT   |   Update On 2021-01-22 07:27 GMT
லிபியாவில் படகு கவிழ்ந்த விபத்துகுள்ளானதில் கடலில் மூழ்கி 43 அகதிகள் பலியாயினர். 10 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.

திரிபோலி:

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையா உள்ளது.

இந்த நகரில் இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென்னு படகின் என்ஜின் பழுதாகி நின்றது.

இதனால் நிலை தடுமாறிய அந்த படகு கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருசிலர் நீந்தி உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்தில் 43 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளன.

இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.

அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றனர். இதனால் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த படகு விபத்தில் அதிகமானோர் உயிரிழப்புக்கு காரணம் என்று அகதிகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஐ.நா. அகதிகள் நல அமைப்புகள் தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டது. அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News