செய்திகள்
இங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரே நாளில் 37892 பேருக்கு பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,43,646 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 94,580 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 15.86 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.