செய்திகள்
கோப்புப்படம்

ஆரம்பத்திலேயே கொரோனாவை தடுக்க தவறிய நாடுகள் - நிபுணர் குழு குற்றச்சாட்டு

Published On 2021-01-19 18:39 GMT   |   Update On 2021-01-19 18:39 GMT
ஆரம்ப கட்டத்திலேயே கொரோனாவை தடுக்க சீனாவும், மற்ற நாடுகளும் தவறி விட்டன. உலக சுகாதார நிறுவனமும் தாமதம் செய்தது என்று நிபுணர் குழு குற்றம் சாட்டியது.
ஜெனீவா:

கொரோனா பற்றி ஆராய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் ஆகியோர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு, நேற்று முன்தினம் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவல் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அதை கட்டுப்படுத்த சீனாவும், இதர நாடுகளும் தவறி விட்டன. அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தாமல் விட்டு விட்டன.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சீனாவில் பெரிய அளவில் கொரோனா பரவத் தொடங்கியபோதே சீனா தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும். மிகக்குறைவான நாடுகளே தங்களுக்கு கிடைத்த தகவலை பயன்படுத்தி, நடவடிக்கை எடுத்தன.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கூட்டம், கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி நடந்தது. ஆனால், சர்வதேச அவசரநிலையை அறிவிக்காமல் தாமதித்தது. ஒரு வாரம் கழித்துத்தான் அறிவித்தது. அதுபோல், கொரோனாவை ‘சர்வதேச பெருந்தொற்று’ என்று மார்ச் 11-ந் தேதிதான் அறிவித்தது. அதற்குள் பல கண்டங்களிலும் கொரோனா பரவி விட்டது.

உலக சுகாதார நிறுவனம், கொஞ்சம் முன்கூட்டியே அறிவித்து இருந்தால், அது கொரோனாவை தடுக்க உதவி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News