செய்திகள்
பாகிஸ்தானில் திடீர் மின்தடை - முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின
பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
ஸ்லமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களான இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான் உள்பட பல நகரங்கள் நள்ளிரவில் இருளில் மூழ்கின.
மின்தடைக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை மந்திரி ஒமர் ஆயுப் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண்கள் 50-ல் இருந்து திடீரென 0-வுக்கு சென்றதே மின்விநியோகம் தடை பட்டதற்கு காரணம் ஆகும். அதிர்வெண்கள் திடீரென சரிந்தது எதனால் என விசாரணை நடக்கிறது. மின் விநியோகத்தை வழங்குவதற்கான மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என பதிவிட்டார்.
இதற்கிடையே, மின்தடையால் கடும் அவதி அடைந்த பாகிஸ்தானியர்கள் சமூக வலைத்தளங்களில் மின் தடை குறித்து பதிவிட்டனர். இதனால் டுவிட்டரில் மின்தடை குறித்த பதிவுகள் டிரெண்ட் ஆனது. பல பயனாளர்கள் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை குறித்து நையாண்டியாக பதிவிட்டதையும் காண முடிந்தது.