செய்திகள்
போலீஸ் மீது தாக்குதல் நடத்திய தந்தை மகன்

கொரோனா பரிசோதனை செய்ய வரிசையில் வருமாறு கூறிய போலீசை அடித்து துவைத்த தந்தை, மகனுக்கு 1 ஆண்டு சிறை

Published On 2021-01-08 17:58 GMT   |   Update On 2021-01-08 17:58 GMT
கொரோனா பரிசோதனை செய்ய வரிசையில் வருமாறு கூறிய போலீசை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
பீஜிங்:

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அந்நாட்டின் லியாங்கிங் மாகாணம் ஷேன்யாங் நகரில் கடந்த 1-ம் தேதி கொரோனா பரிசோதனை நடைபெற்று வந்தது. இந்த பரிசோதனையில் பங்கேற்க நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அதில் ஜிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) மற்றும் அவரது மகன் லின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை முந்திக்கொண்டு பரிசோதனை எடுக்க வேண்டும் என ஜிங் நினைத்துள்ளார். இதனால், வரிசை தனக்கு முன்னால் இருந்தவர்களை முந்திக்கொண்டு சென்றுள்ளார். உடனடியாக, ஜிங்கிற்கு முன்னால் நின்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதத்தை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த சாங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற போலீஸ் சண்டையை நிறுத்த முயற்சித்துள்ளார்.  மேலும், கொரோனா பரிசோதனைக்கு வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தினர்.

அப்போது ஜிங்கிற்கும் போலீசுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தந்தை போலீஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை 
கவனித்த ஜிங்கின் மகன் லின்னும் வரிசையை விட்டு வெளியேறி போலீசுடன் வாக்குவாதம்  நடத்தியுள்ளார்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியுள்ளது. தந்தை ஜிங் மற்றும் அவரது மகன் லின் இணைந்து போலீஸ் சாங்கை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் போலீசின் தலை, முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிற போலீசார் தாக்குதல் நடத்திய ஜிங் மற்றும் அவரது மகன் லின் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஷேன்யாங் நகரம் குவாங்க்கியூ மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது ஜிங் மற்றும் லின் என்பது உறுதியானது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது. அதில், போலீஸ் சாங் மீது தாக்குதல் நடத்திய லின்னுக்கு 1 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது தந்தை ஜிங்கிற்கு 10 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பையடுத்து, தந்தை ஜிங் மற்றும் அவரது மகன் சாங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News