செய்திகள்
டொனால்டு டிரம்ப்

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

Published On 2021-01-08 16:32 GMT   |   Update On 2021-01-08 16:32 GMT
அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.

தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் அந்நாட்டு பாராளுமன்றத்தின் நேற்று நடைபெற்றது. 

அப்போது, அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

இந்த வன்முறையின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் 4 பேர் மற்றும் ஒரு போலீஸ் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் அதிபர் தேர்தல் வெற்றியாளராக பைடனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

அதில் தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை செலுத்தி அதை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்திருந்தனர். அந்த சீலிட்ட கவரை பிரித்து மாகாண சபை உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணினர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வானார். அவர் வெற்றி பெற்றதாக துணை அதிபர் மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

டொனால்டு டிரம்ப் 232 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். 

இந்நிலையில், ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் அந்த பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

’ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை என்பதை கேள்வி கேட்ட அனைவரிடமும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற வன்முறை தொடர்பாக டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கம் 12 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News