செய்திகள்
ஜாகியுர் ரஹ்மான் லக்வி

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை - பாக். நீதிமன்றம்

Published On 2021-01-08 15:09 GMT   |   Update On 2021-01-08 15:09 GMT
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாகூர்: 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். 

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுமார் 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியும் பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையது, தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி(61) உள்பட 7 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. 

இதில் லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டான். இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. அதேபோல் ஹபீஸ் சையதுவும் சிறையில் வைக்கபடாமல் வீட்டுக்காவலில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளான்.

இதற்கிடையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் பயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டியதற்கான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் கிடைத்ததையடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளியான பயங்கரவாதி ஜாகியுர் ரஹ்மான் லக்வியை லாகூர் போலீசார் கடந்த 2-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள லக்வி மீதான வழக்கு விசாரணை லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வெளியானது. 

அதில், பயங்கரவாதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்கான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு அவன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து பயங்கரவாதி லக்விக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பயங்கரவாத செயலுக்கான நிதித்திரட்டுதல் தொடர்பாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் தலா 5 வருடங்கள் என மொத்தம் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் 3 வழக்குகளையும் சேர்த்து பாகிஸ்தான் மதிப்பில் 3 லட்சம் ரூபாய் அபராதாம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்த தவறும்
பட்சத்தில் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பயங்கரவாதில் ஜாகியுர் ரஹ்மான் லக்வி சிறையில் அடைக்கப்பட்டான்.
Tags:    

Similar News