செய்திகள்
பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது - போரிஸ் ஜான்சன்

Published On 2020-12-24 17:42 GMT   |   Update On 2020-12-24 17:42 GMT
பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸ்:

இங்கிலாந்தும்  ஐரோப்பிய ஒன்றியமும்  பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து  பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.  பல மாதங்களாக கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் உடனடி விலகல் பொருளாதார பாதிப்பை  குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதுபோல் உள்ளது.

ஜனவரி 1-ம் தேதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், ஆளுக்கொரு பக்கம் கோபமாக வெளியேறுவதை விட, சுமூகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என இங்கிலாந்தும் , ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து  சார்பில் லார்டு பாரஸ்ட் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மைக்கேல் பார்னியர்  மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து தவறேதும் இல்லாதபடி கவனமாக உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் குறித்து நேற்றிரவு தனது சக அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தார் இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன்.

பிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என இங்கிலாந்து  விரும்பியது போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   
இந்நிலையில், "ஒப்பந்தம் முடிவடைந்தது" என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவீட் செய்துள்ளார், இங்கிலாந்து ஐரோப்பாவின் நட்பு நாடாகவும் "முதலிட சந்தையாகவும்" இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், "நாங்கள் இறுதியாக ஓர் ஒப்பந்தத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா  சாலையாக இருந்தது. ஆனால் அதன் முடிவில் எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News