செய்திகள்
கோப்பு படம்

புதிய வகை கொரோனா வைரஸ் - இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள்

Published On 2020-12-20 15:23 GMT   |   Update On 2020-12-20 15:23 GMT
இங்கிலாந்தில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டன்:

இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் பாதிப்பை தடுக்கும்வகையில் அந்நாட்டில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 

தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் கொரோனா விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் புதிய உச்சத்தை தொட்டது. தினமும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

வைரஸ் இவ்வளவு வேகமாக பரவ காரணம் என்ன? என்பது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி செய்தனர். 

அதில் தற்போதைய கொரோனா வைரஸ் முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது. அதாவது கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய வைரசின் பாதிப்பு சக்தியை கொண்டிருந்த போதும் அதன் பரவும் வேகம் மிகவும் அதிக அளவில் இருந்தது. அதாவது, பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக உள்ளது. 



இதன் காரணமாகவே இங்கிலாந்தில் அதிக அளவில் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை உறுதியானதையடுத்து இங்கிலாந்தின் பல்வேறு மாகாணங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை தடை செய்வதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவித்தார். மேலும், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தினார்.

இதற்கிடையில், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்தே விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கியிருந்தனர். 

இதனால், பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு செல்லவும், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரசாக மாற்றமடைந்து வேகமாக பரவி வருவதால் பல ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்த தடை இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன. 

மற்ற நாடுகளை போலவே ஜெர்மனியும், பிரான்சும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்த திட்டமிட்டு வருகின்றன. இந்த விமான போக்குவரத்து தடை முடிவை ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதன் தகவமைப்பை மாற்றி வளர்சிதை மாற்றமடைந்துள்ளது என்ற தகவல் சற்று அதிர்ச்சியளிக்கும் வகையிலே உள்ளது.
Tags:    

Similar News