செய்திகள்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-12-17 10:28 GMT   |   Update On 2020-12-17 10:28 GMT
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பாரிஸ்:

உலகம் முழுவதும் கோரப்பிடியை இறுக்கிய கொரோனா வைரஸ், பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அதிபர் ஒரு வாரத்திற்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார் என்றும், வீட்டில் இருந்தபடியே அரசுப் பணிகளை கவனிக்க உள்ளதாகவும் அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து போராடுவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், இந்த வார துவக்கத்தில் தளர்த்தப்பட்டன. அதே சமயம் தொற்று எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. எனவே, நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இரவு 8 மணி முதல் காலை வரை உணவகங்கள், தேநீர் கடைகள், தியேட்டர்கள் மூடப்படுகின்றன.
Tags:    

Similar News