அமெரிக்காவின் வாஷிங்டனில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் காந்தி சிலை அவமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் காந்தி சிலை அவமதிப்பு - வாஷிங்டனில் பரபரப்பு
பதிவு: டிசம்பர் 13, 2020 04:08
காலிஸ்தான் கொடி சாத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை
வாஷிங்டன்:
இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பலர் திரண்டனர். அவர்கள் விசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அப்போது அங்கிருந்த சிலர் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.