செய்திகள்
நிலவுக்கு செல்லும் வீரர்கள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி உள்பட நிலவுக்கு செல்லும் 18 வீரர்கள் பெயர்களை அறிவித்தது நாசா

Published On 2020-12-11 00:22 GMT   |   Update On 2020-12-11 00:22 GMT
இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் ராஜா சாரி உள்ளிட்ட 18 வீரர்களின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

விண்வெளியில் பறந்த முதல் வீரர் என்ற பட்டத்தை சோவியத் ரஷியாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்பவர் பெற்றார். அவர் பயணித்த நாள் 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதியாகும். அவர் 108 நிமிடங்கள் வோஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பூமியை வலம் வந்தார்.

அவரைத் தொடர்ந்து 1963-ம் ஆண்டு 3 நாட்கள் பூமியை வலம் வந்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையை சோவியத் ரஷியாவைச் சேர்ந்த வாலன்டினா தெரஸ்காவோ பெற்றார்.

விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க வீரர் என்ற பட்டத்தை ஆலன் ஷெப்பர்ட் என்பவர் அடைந்தார். 1984-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் நாள் சோயூஸ் டி.11 என்ற சோவியத் நாட்டு விண்கலத்தில் பறந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் ஷர்மா அடைந்தார்.

36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா என்ற பெண்மணியும் ஒருவர். 2003-ம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய கொலம்பியா என்ற விண்கலம் புவிமண்டலத்துக்குள் திரும்ப நுழையும் போது தீப்பற்றி எரிந்து சிதறியது. அப்போது உயிரிழந்தவர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர்.

இந்தியாவின் செயற்கைகோள் ஒன்றுக்கு அவரது நினைவாக ‘கல்பனா’ என்று பெயர் சூட்டப்பட்டது. மறைந்த அவரது நினைவாக பல்வேறு பட்டங்கள் அளிக்கப்படுகின்றன. பல நினைவகங்களும் நிறுவப்பட்டுள்ளன.

விண்வெளியில் நிலவைச் சென்றடையும் முயற்சியில் அமெரிக்கா முதல் வெற்றியை அடைந்தது. அப்போல்லோ-11 என்ற விண்கலத்தில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவர்தான் முதலில் நிலவில் கால் பதித்த மனிதன் என்ற பட்டத்தையும் பெற்றார். இது 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும். அன்று அவர் கூறிய வார்த்தைகளும் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

நான் வைப்பது சிறிய முதல் அடி, ஆனால் மனித இனத்திற்கோ அது மிக மிகப்பெரிய வெற்றிப்படி என்பது அவரது கூற்றாகும். வெற்றிகரமாக மனிதர்கள் நிலவில் கால் பதித்துத் திரும்பலாம் என்பது நிரூபணமாயிற்று.

இந்தியாவும் இந்த நிலவில் கால் பதிக்கும் ஆராய்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளதை இந்தத் தருணத்தில் நினைவில் கொள்ளலாம். சந்திரயான்-1 என்ற விண்கலத்தைச் செலுத்தி 2008-ம் ஆண்டு நவம்பர் 14-ம் நாள் அதிலுள்ள ஒரு கருவியை வெற்றிகரமாக நிலவில் இறக்கிய பெருமையை அடைந்துள்ளோம். நிலவில் நாம் இறங்கிய இடத்துக்கு ஜவகர் புள்ளி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் 2-வது முறையாக நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது. 

இரண்டாவது முறையாக, நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில்  நாசா ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக 18 விண்வெளி வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நாசா பயிற்சி அளிக்க உள்ளது. 

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி என்பவர் உள்பட 9 ஆண் மற்றும் 9 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களை துணை அதிபர் மைக் பென்ஸ், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில், அறிமுகப்படுத்தினார்.

இதில் சில வீரர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதால் 5 வீரர்கள் மட்டுமே அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மற்றவர்களின் பெயர்களை துணைஅதிபர் அறிவித்தார். ஆர்டெமிஸ் திட்டத்தை 2024ல் நிறைவேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News