செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி

கால்பந்து போட்டியின்போது இரு தரப்பு இடையேயான மோதலில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

Published On 2020-12-10 00:23 GMT   |   Update On 2020-12-10 00:23 GMT
கால்பந்து போட்டியின்போது இரு தரப்பினருக்கு இடையேயான மோதலால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டில் சில ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள், உள்நாட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆயுத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், கால்பந்து போட்டியின்போது இரு தரப்பு இடையேயான மோதலால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அந்நாட்டின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடினர்.

போட்டியின்போது ஒரு பிரிவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே திடிரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே சண்டையாக மாறியது.

அந்த சண்டையின்போது போட்டியில் பங்கேற்றிருந்த ஒரு வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு எதிர்தரப்பினரை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

வீரரின் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். ஆனால், அந்த வீரர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தனது நண்பர்களுடன் தப்பிச்சென்றுவிட்டார். 

இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற இளைஞரையும் அவரது நண்பர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News