செய்திகள்
உலகின் பல பகுதிகளில் நிறுவப்பட்ட மர்ம தூண்கள்

உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள்: 2020-ம் ஆண்டின் மற்றொரு பரபரப்பு

Published On 2020-12-07 17:37 GMT   |   Update On 2020-12-07 17:37 GMT
அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுபோன்ற நிகழ்வு உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். 

அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தது. அந்த தூண் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் மர்மமான முறையில் மாயமானது.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்சனைகள் 2020-ம் ஆண்டு உலக மக்களுக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைய காரணமான நிலையில் பாலைவனத்தின் நடுவே உலோக தூண் மர்மமான முறையில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டிருந்த சம்பவம் 2020-ம் ஆண்டை இறுதி பகுதியை மேலும் பதற்றம் அடைய செய்தது. 

அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியதையடுத்து
உலகம் முழுவதிலும் இருந்தும் பலர் இது எலியன்கள் பூமிக்கு வருவதான அறிகுறி உள்பட பல்வேறு கதைகளை இணைய தளத்தில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில், யூட்டா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தூணை போன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் நிறுவப்பட்ட தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இதுவரை மொத்தம் 6 மர்மதூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவை உலகின் பல நாடுகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மர்மமான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.



அது குறித்த விவரங்களை காண்போம்:-

* நவம்பர் 18 - அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

* ருமேனியா நாட்டின் பட்ஹா டொம்னி மலைப்பகுதியில்  2-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

* அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பைன் மலைத்தொடர் பகுதியில் 3-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

* இங்கிலாந்து நாட்டில் உள்ள ஐஸ்லி ஆப் வெயிட் என்ற தீவில் உள்ள கடற்கரையில் முக்கோண வடிவிலான 4-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

* நெதர்லாந்து நாட்டில் உள்ள அவுண்ட் ஹார்ன் என்ற நகரில் உள்ள காட்டுப்பகுதியில் 5-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தூணை நாங்கள் தான் நிறுவினோம் என அமெரிக்காவை சேர்ந்த ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற அமைப்பு பொறுப்பெற்றுள்ளது.

* இந்நிலையில், 6-வது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மர்ம தூண்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் இருந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூண் தங்க நிறத்தில் உள்ளது. 



இந்த தூண் கொலம்பியாவில் உள்ள சியா நகராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் இந்த மர்ம தூண்கள் ஏலியன்களால் நிறுவப்பட்டதால் அல்லது ஏதேனும் குழுக்களால் மக்களை பயமடைய செய்யும் நோக்கத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறதா என்பது தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர். மேலும், அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மர்ம தூண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் மக்கள் இந்த தூண்களையும் ஏலியன் வருகையையும் ஒப்பிட்டு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News