செய்திகள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து

Published On 2020-12-05 23:42 GMT   |   Update On 2020-12-05 23:42 GMT
இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டாவா: 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை கனடா எப்போதும் ஆதரிக்கும் என்று கூறினார். விவசாயிகள் நிலை குறித்து கவலை தெரிவித்தார். சில கனடா மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து,  இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது. அவரை வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தது. அவரிடம் கனடா பிரதமரின் கருத்துக்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

கனடா பிரதமரும், அந்நாட்டு அரசியல் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளை, இந்தியாவின் உள்விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடாக கருதுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதேநிலை நீடித்தால், இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது பற்றி செய்தியாளர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினர்.

இக்கேள்விக்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ,  உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் அமைதியான  போராட்டத்திற்கு கனடா துணை நிற்கும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார். 

இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News