செய்திகள்
கோப்புப்படம்

ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த 4 வழக்குகள் ஒரே நாளில் தள்ளுபடி

Published On 2020-12-05 19:05 GMT   |   Update On 2020-12-05 19:05 GMT
ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த 4 வழக்குகளை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த மாதம் 3-ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவியேற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

எனவே ஜோ பைடன் வெற்றிபெற்ற பெரும்பாலான மாகாணங்களில் அவரது வெற்றியை எதிர்த்து டிரம்ப் பிரசார குழு கோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்துள்ளன. எனினும் இந்த வழக்குகளில் டிரம்ப் பிரசார குழு தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 4 மாகாணங்களின் கோர்ட்டுகள் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தன. அந்த மாகாணங்கள் ஜார்ஜியா, மிச்சிகன் நெவாடா மற்றும் விஸ்கான்சின் ஆகியவையாகும். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாக கூறி நீதிபதிகள் வழக்குகளை தள்ளுபடி செய்தனர். இது தேர்தல் முடிவை மாற்றியமைக்கக் கோரும் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News