செய்திகள்
’நிலைமை கவலையளிக்கிறது‘ - இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு
உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளுக்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
டொரன்டோ:
இந்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால், அரசு விடுத்துள்ள பேச்சுவார்த்தை அழைப்பை விவசாய குழுக்கள் நிராகரித்துள்ளன.
இந்நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கத்தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக இன்று கனடாவில் வாழும் சீக்கியர்களுக்கு குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்தியான விவசாயிகள போராட்டங்களை அங்கீகரிக்காமல் நான் என் பேச்சை தொடங்கினால் அது பொறுப்பானதாக இருக்காது. அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கம் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். பேச்சுவார்த்தை மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்.
ஆகையால், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெவ்வெறு வழிகளில் இந்திய அரசை தொடர்பு கொண்டு எங்கள் கவலையை வெளிப்படுத்தினோம்.
என்றார்.
கனடாவில் இந்திய வம்சாளி மற்றும் புலம்பெயர் இந்தியவர்கள் பலர் வசித்து வருகின்றனர். கனடா அரசின் முக்கிய பதவிகளில் இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.