செய்திகள்
மும்பை தாக்குதல்

ராணாவை நாடு கடத்தும் வழக்கில் பிப்ரவரி 12-ம் தேதி விசாரணை - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

Published On 2020-12-01 00:28 GMT   |   Update On 2020-12-01 00:28 GMT
மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி ராணாவை நாடு கடத்தும் வழக்கில் பிப்ரவரி 12-ம் தேதி விசாரணை நடைபெறும் என அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்:

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதி செய்ததாக அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணா குற்றம் சாட்டப்பட்டார். இவ்வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு இருவரும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம், ராணா விடுதலை செய்யப்பட்டபோதிலும், இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த  வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜாக்குலின் செலோனியன் அறிவித்துள்ளார்.

நாடு கடத்தும் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ராணாவுக்கு டிசம்பர் மாத இறுதிவரை கால அவகாசம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News