செய்திகள்
கோப்புப்படம்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.

Published On 2020-11-26 21:55 GMT   |   Update On 2020-11-26 21:55 GMT
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு விழாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுரவ் சர்மா இந்திய மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றார்.
வெல்லிங்டன்:

நியூசிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதன் மூலம் ஜெசிந்தா 2-வது முறையாக பிரதமர் ஆனார்.

இந்த தேர்தலில் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா (வயது 33) தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அப்போது கவுரவ் சர்மா இந்திய மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றார்.

இதுகுறித்து நியூசிலாந்துக்கான இந்திய தூதர் முக்தேஷ் பர்தேஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நியூசிலாந்து பூர்வகுடிகளின் மொழியான மாவோரியில் கவுரவ் சர்மா முதலில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து இந்திய செம்மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து, இந்தியா ஆகிய இரு நாடுகளின் கலாசாரத்துக்கும் அவர் மதிப்பளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

கவுரவ் சர்மா இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பிறந்தவர் ஆவார். இவர் நியூசிலாந்தின் ஆக்லந்தில் எம்.பி.பி.எஸ். பயின்று பின்னர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார். இவர் ஹாமில்டன் நகரில் டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News