செய்திகள்
டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2020-11-22 19:17 GMT   |   Update On 2020-11-22 19:17 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு ஒன்றை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
வாஷிங்டன்:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் கடந்த 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 4 நாட்களாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. எனினும் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த ஜோ பைடன் வெற்றிக்கு தேவையான 270 வாக்குகளை விட அதிக வாக்குகளை வாங்கி குவித்தார். இதன்மூலம் அவர் ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவில் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேசமயம் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டும் அவர் இது தொடர்பாக கோர்ட்டை நாடியுள்ளார்.

அந்த வகையில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பதிவான பல லட்சம் தபால் ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்த மாகாண கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 20 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் டிரம்பைவிட சுமார் 80,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். எனவே ஜோ பைடனின் இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கும் நோக்கிலேயே டிரம்ப் பிரசார குழு இந்த வழக்கை தொடர்ந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி மேத்யூ பிரான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிரம்ப் பிரசார குழு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பென்சில்வேனியாவில் ஜனநாயக கட்சியால் நடத்தப்படும் மாவட்டங்கள் வாக்காளர்களை தங்கள் வாக்குச்சீட்டில் பிழைகளை சரி செய்ய அனுமதித்தன என்றும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்புக்கான உத்தரவாதம் மீறப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.

அதேசமயம் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க டிரம்ப் பிரசார குழு எந்தவித ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் பிரசாரக் குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் அடுத்த வாரம் பென்சில்வேனியா மாகாணம் ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அழிப்பதற்கு வழி உண்டாகியுள்ளது.

அதேசமயம் இது தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடனின் வெற்றி உறுதியானது டிரம்ப் நிர்வாகத்துக்கு மற்றொரு அடியாக அமைந்தது. அங்கு வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஜார்ஜியா மாகாண மறு வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி நடந்துள்ளதாக கூறி மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் டிரம்ப் பிரசாரக் குழு கோர்ட்டை நாடியுள்ளது.

அதேபோல் மிச்சிகன் மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவை அறிவிப்பதை 2 வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று குடியரசு கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Tags:    

Similar News