செய்திகள்
பிரெஞ்சு படையினர் (கோப்பு படம்)

மாலியில் பிரான்ஸ் படையினர் அதிரடி தாக்குதல் - பயங்கரவாதிகள் 30 பேர் பலி

Published On 2020-11-15 16:46 GMT   |   Update On 2020-11-15 16:46 GMT
மாலி நாட்டில் பிரான்ஸ் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா, ஐஎஸ் மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. 

அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் 2012-ம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு ராணுவம் மட்டுமல்லாமல் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் மாலியில் தங்கள் ராணுவ தளங்களை அமைத்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

2015-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். 416 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலை பிரான்ஸ் அதிகப்படுத்தியது. குறிப்பாக மாலி நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், போப்டி நகரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நைகி என்ற பகுதியில் பிரான்ஸ் அதிரடி படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். 

இந்த தேடுதல் வேட்டையின் போது ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், வாகனங்களை கைப்பற்றி அழித்ததாக பிரான்ஸ் அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News