செய்திகள்
தலிபான் அமைப்பின் முக்கிய தளபதிகள் 55 பேர் கொன்றுகுவிப்பு - ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி
ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலிபான் அமைப்பின் முக்கிய தளபதிகள் 55 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதல்களுக்கு உள்நாட்டு ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் காந்தகார் மற்றும் தெற்கு ஹெல்மெண்ட் மாகாணங்களில் சமீபத்தில் ஆப்கன் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகள் 55-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சத்தின் செய்தித்தொடர்பாளர் தஹ்ரிக் அரின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 152 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், மோதல் மற்றும் உயிரிழப்பு தொடர்பான தகவல்களில் உண்மையில்லை என தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.